தொண்டியக்காடு கடற்கரையில் சுற்றியவர்கள் சீன ராணுவத்தினரா? போலீஸ் தேடுதல் வேட்டை
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் தொண்டியக்காடு கடற்கரை கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் ராணுவ உடையில் வந்த இரண்டு பேர் அந்தப்பகுதியில் விறகு வெட்டிக் கொண்டிருந்த நாகரத்தினம் என்ற பெண்ணிடம் தமிழ் அல்லாத ஏதோ ஒரு மொழியில் பேசியிருக்கிறார்கள்.
நாகரத்தினத்திற்கு அந்த மொழி தெரியாததால் கடற்கரைக்கு வழி கேட்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு கடற்கரை பக்கமாக வழி காட்டியுள்ளார். இதன் பின்னர் ஊருக்குள் வந்த நாகரத்தினம், அங்கிருந்த பொதுமக்களிடம் சற்று வித்தியாசமான முறையில் தோற்றம் கொண்ட இருவர் ராணுவ உடையுடன் இருந்தனர். அவர்கள் பேசிய மொழியும் எனக்கு தெரியவில்லை. அதனால் அவர்களிடம் கடற்கரை வழியை காட்டிவிட்டு வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் காட்டுப்பகுதி மற்றும் கடற்பகுதிக்குள் தேடிப்பார்த்தும் அவர்களை காணவில்லை. அதன்பிறகு காவல்துறைக்கு தகவல் சொல்லப்பட்டது.
போலீஸ் டிஐஜி திருஞானம், எஸ்.பி.பிரவீண்குமார், ஏ.எஸ்.பி.சரவணன் ஆகியோர் தலைமையிலான தனித்தனி டீம்கள் கடற்பகுதி மற்றும் அலையாத்திக்காடுகளிலும் தேடி வருகின்றனர்.
காட்டுப்பகுதிக்குள் வந்தவர்கள் இலங்கையில் ராணுவ முகாம் அமைக்க வந்திருக்கும் சீன ராணுவத்தினரா? அல்லது தீவிரவாதிகளா என்று பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக