அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

பி.ஜே வை கொல்ல சதித்திட்டமா? - குமுதம் ரிப்போர்ட்

ரகசியமாக ஆலோசனைக் கூட்டம் போட்டு என்னைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியுள்ளனர். இதற்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதும் அல்லாவின் உதவியால் எனக்குத் தெரியவந்துள்ளது. இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்.எதையும்சந்திக்கத் தயார்படுத்திக் கொண்டுதான் பொதுவாழ்வுக்கு வந்துள்ளேன்’ என்ற மிக நீண்ட கட்டுரை ஒன்று ‘ஆன்லைன் பிஜெ’ இணையதளத்தில் வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

ஆரம்பத்தில் த.மு.முக.வின் பொதுச்செயலாளராக இருந்து, அதிலிருந்து விலகி தற்போது தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் தலைவராக இருக்கும் பி.ஜெயனுல்லா ஆபுதீன்தான் இந்தக் கட்டுரைக்குச் சொந்தக்காரர்.
இணையதளத்தில் அவர் எழுதி வெளியிட்டுள்ள விவரத்தைத் தொடர்ந்து பார்ப்போம்.


என்னைக் கொல்வது மிக எளிதானதுதான். என்னைக் கொன்றுவிட்டு அதற்காக கண்டனக் கூட்டம் போட்டு என் மக்களை ஏமாற்றத் தயங்கமாட்டார்கள்.
அப்படி ஏமாற்றக்கூடாது என்பதற்காகவும்,அப்பாவிகள் கைது செய்யப்படக்கூடாது என்பதற்காகவும், யார் யார் பின்புலத்தில் உள்ளனர், இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார், யார் என்பதையும் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி வைத்துள்ளேன். பாதுகாப்பு எதையும் கோரவில்லை’’ என்று இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார் பி.ஜெ.


யார் யாரெல்லாம் தன்னைக் கொலை செய்யக் காத்திருக்கிறார்கள் என்பதையும்,பழைய சம்பவங்களையும் அந்தக் கட்டுரையில் பி.ஜெ. விவரித்துள்ளார்.

மதுரை ராஜகோபாலன் வழக்கில் கைதான மதுரை ராஜா ஹூசைன், பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு தலைமறைவாக இருந்த ஏர்வாடி காஸிம், த.மு.மு.க.வின் முன் னாள் பொருளாளர் பாக்கர் ஆகியோரைத் தூண்டிவிடுவது த.மு.மு.க.வின் தலைவர் ஜவாஹிருல்லா,பொதுச் செயலாளர் ஹைதர் அலி என அனைவரையும் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.

‘ஏர்வாடி காஸிம் வேலூர் சிறையில் இருந்தபோது ஹைதர் அலியும், பாக்கரும் அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது சிறையின் திறந்தவெளியில் ஹைதர் அலியும்,பாக்கரும் காலாற நடந்து சென்றபோது,அவர்களைப் பார்த்த காஸிம் பாய்ந்து வந்து ஹைதர் அலியின் குரல்வளையைக் கடித்துக் கொல்ல முயன்றார்’என்றும் எழுதப்பட்டிருக்கிறது.
பி.ஜெ.யின் இந்த இணையதளக் கட்டுரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதனைத் தொடர்ந்து நாமும் விசாரணையில் இறங்கினோம். த.மு.மு.க.வின் தலைவர் ஜவாஹிருல்லாவை சந்தித்துப் பேசியபோது, ‘‘கடந்த செப்டம்பர் 5-ம் தேதி திருவாரூர் மாவட்டம் திருவிடச்சேரி ஜமாத் தலைவர் முகம்மது இஸ்மாயில்,ஹஜ் முகம்மது இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவர்களைத் தவிர ராமதாஸ்,, பால்ராஜ், நசீர் முகம்மது ஆகியோரும் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி படுகாயம் அடைந்தனர்.இந்தச் சம்பவத்திற்குப் பின்னணியில் இருந் தவர் பி.ஜெயனுல்லா ஆபுதீன்தான். இவரை பின்பற்றக்கூடிய திருவிடச்சேரி கிராமத்தைச் சார்ந்த 10பேர் ரோஸ்பாப்பா என்பவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து தனியாக ரமலான் தொழுகை நடத்தி வந்தனர்.

இவர்கள் ரோஸ்பாப்பாவின் வீட்டில் ஒலிபெருக்கி வைத்து நள்ளிரவு வரை தொழுகை மற்றும் பேச்சுக்களை ஒலிபரப்பி வந்தனர். ரோஸ்பாப்பாவின் எதிர்வீட்டில் ஜபாருல் லாவும், அவரது சகோதரரும், சகோதரியும் குடியிருந்தனர்.
ஜபாருல்லாவின் சகோதரருக்கும், சகோதரிக்கும், ஆளுக்கொரு மகன் இருக்கின்றனர்.இந்த இருவரும் மூளை வளர்ச்சி குன்றியவர்கள். ஒலிபெருக்கியின் சத்தம் இரவில் அதிகமாக இருந்ததால் அவர்களால் சரியாக உறங்க முடியவில்லை.


இருந்தாலும் அவர்கள் அதைப் பெரிதுபடுத்தவில்லை. ஒலிபெருக்கியின் சத்தத்தைச் சற்று குறைத்து வைக்குமாறு கேட்க வாய்த் தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து விசாரிப்பதற்காக ஜமாத் தலைவர் முகம்மது இஸ்மாயில் சம்பவ இடத்திற்கு வந்தபோது குத்புதீன், ஜமாத் தலைவரின் சட்டையைப் பிடித்து மோசமான வார்த் தைகளில் திட்டினார். உடன் இருந்தவர்கள் அவர்களை விலக்கிவிட, ‘நான் இந்தத் தெருவை என்ன செய்கிறேன் பார்’ என்று மிரட்டும் குரலில் பேசிவிட்டுச் சென்றி ருக்கிறார் குத்புதீன்.


அன்று இரவு,தொழுகை முடித்துவிட்டு திருவிடச்சேரி ஜமாத் பள்ளிவாசலில் இருந்த இஸ்மாயிலை குத்புதீனும் அவருடன் வந்த வெளி நபர்களும் தாக்கினர்.
பள்ளிவாசலில் இருந்தவர்கள் அங்குள்ள ஒலிபெருக்கியின் மூலம் பதற, ஒட்டுமொத்த கிராமமும் ஜமாத் பள்ளிவாசலுக்கு வந்தது.ஜமாத் தலைவரின் மகன் சபீர்வுதீன் ஆவேசத்துடன் ‘யார்டா எங்க அப்பாவை தாக்கியது?’ என்று வந்தபோது, ஹாஜ் முகம்மது துப்பாக்கியை எடுத்து ஜமாத் தலைவரையும் ஜபாருல்லாவின் மைத்துனர் ஹஜ் முகம்மதுவையும் சுட்டுக் கொன்றார்.


பின்னர் கிராம மக்கள் சூழ்ந்துகொள்ள அதே துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை படபடவென ஒரு ரவுண்ட் சுட்டுவிட்டு தப்பித்துவிட்டனர். தமிழகத்தில் உள்ள அனை த்து முஸ்லிம்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது இந்தச் சம்பவம்.
இந்தச் சம்பவத்திற்கு முழுக் காரணம் பி.ஜெயனுல்லா ஆபுதீன்தான் என்று அனைவருக்கும் தெரியும்.இந்தச் சம்பவத்திலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளத்தான் தற்போது அவர் இப்படியெல்லாம் எழுதியும், பேசியும் வருகிறார்.


மேலும் அந்தச் சம்பவத்தில் பலியானவர்களுக்காக பி.ஜெயனுல்லா ஆபுதீன் இதுவரையில் ஓர் ஆறுதல் வார்த்தைகூட கூறவில்லை. தமிழக அரசும் உயிரிழந்தவர்களுக்கு இதுவரை எந்த இழப்பீடும் கொடுக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த இழப்பீடு கொடுக்கவேண்டும்’’என முடித்துக்கொண்டார்.

அடுத்ததாக இந்திய தவ்ஹித் ஜமாத்தின் தலைவர் பாக்கரை சந்தித்துப் பேசியபோது,‘‘நானும் அந்த இணையதள கட்டுரையைப் படித்தேன். குறிப்பாக என்னைக் குறிக்கும் சம்பவங்கள் அதில் அதிகமாக கூறப்பட்டிருக்கிறது.அவர் சொல்வதைப் போல் எனக்கோ,ஹைதர் அலிக்கோ, ஜவாஹிருல்லாவுக்கோ அந்த மாதிரியான எந்த எண்ணமும் கிடையாது.

அதேபோல் அல்-உம்மா மீதும் பழிபோடுவதில் எந்த நியாயமும் இல்லை. பி.ஜெ.வை கொலை செய்யணும் என்று முடிவு செய்திருந்தால் அது எப்போதோ நடந்திருக்கும். அவர்கள் எல்லாம் இப்போது வழக்கில் இருந்து விடுபட்டு தங்கள் புது வாழ்க்கையை ஆரம்பித்துள்ளனர்.

சமீபத்தில்கூட ஆலீம் ஜாஜ்ஜின் மனைவி கொல்லப்பட்டபோது அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவருக்கு பி.ஜெ உதவி செய்திருக்கிறார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அல்-உம்மா என்பதாலும் அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பண உதவியும் செய்திருக்கிறார் என்பதும் தெரியவந்திருக்கிறது.
இப்படி இருக்கையில் அல்-உம்மா அவரைக் கொலை செய்யத் துடிக்கிறது என்றால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.


இப்போது இவர் ஏன் பயந்து பாதுகாப்பு கேட்கிறார் என்றால் சுன்னத் ஜமாத் தலைவர் முகம்மது இஸ்மாயில் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தான் முழுக்க முழுக்க காரணம் என்று அனைத்து முஸ்லிம் நண்பர்களும் நம்புகின்றனர்.
மேலும் சிதம்பரத்தில் உள்ள பி.ஜெ.யின் மைத்துனர்தான் ஹாஜ் முகம்மதுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சரணடைய வைத்தார். இதன்மூலம் இவர்கள் மேல் உள்ள சந்தேகம் அதிகமாகியுள்ளது.


கொல்லப்பட்டவர் சுன்னத் ஜமாத் தலைவர் என்பதாலும்,தலைவரின் குடும்பம் சற்று செல்வாக்கு மிகுந்தது என்பதாலும் அவர்கள் ஆத்திரமடைந்து பி.ஜெ.வுக்கு எதிரான விளைவுகள் ஏற்படுத்தக்கூடும் என்ற வாய்ப்பும் இருக்கிறது.
இதைக் காரணம் காட்டித்தான் பி.ஜெ. பாதுகாப்பு கேட்டிருக்கலாம். அல்-உம்மாவை காரணம் சொல்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை’’ என்றவரிடம்,


நீங்கள் வேலூர் சிறையில் இருந்தபோது உங்களுடன் இருந்த ஹைதர் அலியின் குரல்வளையை ஏர்வாடி காஸிம் கடிக்க முயன்றார் என்று பி.ஜெ. கூறியிருக்கிறாரே?’ என்று கேட்டபோது, ‘‘சிறையில் ஹைதர் அலியைப் பார்த்த சிலர் ஆத்திரமடைந்து தாக்க வந்தனர்.அதற்குள் அங்குள்ள சிறைக் காவலர்,ஹைதர் அலியை மீட்டு பத்திரமாக அழைத்துச் சென்றுவிட்டனர். இதுதான் நடந்தது.
‘யார் ஒருவன் அநியாயமாகக் கொலை செய்கிறானோ அவன் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் கொலை செய்ததற்குச் சமம்’என திருமறை வசனம் கூறுகிறது. இதை அறிந்த உண்மை முஸ்லிம் யாரும் எந்த சமுதாயத்திற்கு எதிராகவும் ஆயுதம் தூக்கமாட்டான்’’ என்று கூறி முடித்துக்கொண்டார்.


அடுத்ததாக ஏர்வாடி காஸிமை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘‘ஆரம்ப காலகட்டத்தில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியவர்தான் இந்த பி.ஜெ. அந்த நேரத்தில் பல முஸ்லிம் இளைஞர்கள் இவரது பேச்சைக் கேட்டுக்கொண்டு தடுப்பு நடவடிக்கைக்காக வன்முறையில் ஈடுபட்டனர்.
அப்போது கொடுங்கையூர் நஸ்ருதீன் மூலம் என்னை போலீஸிடம் காட்டிக் கொடுத்தார். மதுரை ராஜா ஹூசைன் என்பவரையும் இவர்தான் காட்டிக்கொடுத்தார். அதேபோல் இவருக்கு வேண்டாத அனைவரையும் போலீஸில் காட்டிக் கொடுத்தார். இப்போது அனைவரும் விடுதலையாகி வெளியே வந்துவிட்டனர். தவறு செய்தது மனதை உறுத்துவதால் இப்படி பொய்யான செய்திகளை எழுதி எங்களை மீண்டும் உள்ளே தள்ள நினைக்கிறார்.


அதேபோல், கொலை செய்யும் எந்த நோக்கமும் இல்லை. அனைத்தும் அல்லாவிடம் ஒப்படைத்துவிட்டோம்.இனி அல்லா இவரைப் பார்த்துக்கொள்வார். நான் கல்யாணம் செய்துகொண்டு, தொழில் செய்து புதிய வாழ்க்கையைத் தொடங்க இருக்கிறேன்’’என்று முடித்துக்கொண்டார்.இதையடுத்து, நஸ்ருதீனை சந்தித்துப் பேசியபோது, ‘‘ஏர்வாடி காஸிம் எனது நெருங்கிய நண்பர். நானும் காஸிமும் நான்கு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு அதற்கான தண்டனையையும் அனுபவித்துள்ளோம். நான் காஸிமை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றது உண்மைதான்.

அன்றைய தினம் காஸிமும் நானும் சென்னை மண்ணடியில் உள்ள ஒரு இடத்தில் பி.ஜெ. வை சந்தித்தோம். அப்போது பி.ஜெ. காஸிமிடம், திருந்தி வாழுமாறு அறிவுரை வழங்கினார். பின்னர் அங்கிருந்து நாங்கள் கிளம்பும்போது ‘நீங்கள் எங்கே போகிறீர்கள்’ என்று பி.ஜெ. எங்களைக் கேட்டார். ‘இன்று வெள்ளிக்கிழமை என்பதால் பெரம்பூர் ஜமாலியாவில் உள்ள பள்ளிவாசலுக்குச் செல்கிறோம்’என்று பி.ஜெ.விடம் சொல்லிவிட்டுத் தான் வந்தோம்.

நாங்கள் சென்ற இடம் பி.ஜெ.வுக்கு முன் கூட்டியே தெரியும்.நான் காஸிமை காட்டிக்கொடுத்தேன் என்பது பொய்யானது. காஸிமை பி.ஜெ. தான் காட்டிக் கொடுத்தார் என்பது இதன் மூலம் தெரியவருகிறது. அப்போது எங்களைப் பிடித்த போலீஸார்,என்னிடம் வெள்ளைக் காகிதத்தில் எழுதி வாங்கிக்கொண்டுதான் அனுப்பி விட்டனர்’’ என்றார்.
கடைசியாக பி.ஜெ.யிடம் கேட்டபோது,‘‘திருவிடச்சேரி சம்பவத்தில் எங்கள் இயக்கத்தினர் யாருக்கும் தொடர்பு இல்லை.எனவே பிரச்னையை திசைதிருப்ப வேண்டிய அவசியம் இல்லை. இணைய தளத்தில் உள்ள செய்தியைப் பார்த்து போலீஸார் எனக்கும்,என் வீட்டுக்கும் பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள். இதில் இருந்தே உண்மை என்ன என்பது புரியும்’’ என்றார்.


படங்கள்: ஞானமணி, சுரேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக